Daily Archives: ஜூலை21, 2009

கல்லூரி பேரூந்தும் கலக்கலான பெண்களும்…………

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்? கல்லூரிக்குச் சென்ற போது தான் முதன் முறையாக அதுவும் தனியாக நான் சென்ற பேரூந்து பயணத்தை.. போராடி தொட்டு விட்ட வெற்றிக்கோடு போல் கல்லூரி வாழ்க்கை அமைந்தது. அதை விட பேரூந்தில் போய் தான் வர வேண்டும். சைக்கிள் எல்லாம் ஒத்து வராது என்றபோது இரட்டிப்பு சந்தோஷம்.

ஊரில் உள்ள பேரூந்து நிலையத்துக்கு வராமலே தனிப்பாதையில் செல்லும் நகரப் பேரூந்துகள் எப்போதுமே மேட்டுக்கடை அருகே அவசரமாய் உதிர்த்து விட்டு பலரையும் அம்போ என்று விட்டுச்சென்றுவிடும். கல்லூரிப் பாதையில் அந்த நேரத்தில் அது மட்டுமே என்பதால் சற்றே கூடுதல் கவனம் அனைவருக்கும். பிறகென்ன அதில் தான் அருகில் உள்ள மகளிர் கல்லூரி மயில்களும் தோகை விரித்தாடும்.

எப்போதோ வந்த அந்த மதிய சாப்பாடு அடைக்கும் அந்த சில்வர் பாத்திரத்தை காட்டி அக்கா இது போதுமடா? என்ற போது சற்று பயமும் வெட்கமுமாய் இருந்தது. இரண்டு நபர்கள் சாப்பிடும் அளவு எனக்கான அளவு என்றால் மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

ஆனால் மொத்த கல்லூரி வாழ்க்கையிலும் கொண்டு சென்ற அத்தனை விதவிதமான சாப்பாடுகளும் நண்பர்களை என்னுடன் இணைக்க உதவியதே தவிர என் வயிற்றை வளர்க்க உதவவில்லை.

கொள்ளைக் கூட்டத்திற்கு சொர்ணம் தலைவனாக இருப்பான். ஆனால் குணசேகரனும், வில்லவன் கோதையும் நிரந்தர துணை இணை பொதுச்செயலாளராக இருப்பார்கள். தின்று முடித்து விட்டு வழித்த இடத்தில் நன்றி என்று மறவாமல் எழுதியும் இருப்பார்கள்.

முதல் நாள் கல்லூரிக்கு எந்த உடை உடுத்துவது என்பதில் எந்த அக்கறையும் இல்லை. காரணம் இருந்தால் தானே? ஏற்கனவே பல உயரத்தில் பல அளவுகளில் இருக்கும் போது என்ன கவலை? பெங்குவின் போட்ட அந்த நைலக்ஸ் சட்டையை போட்டு பார்த்த போது கால் மற்றும் கை முட்டியை முழுசாகத் தொட்டது. கவலை இல்லை. இன் செய்து கை ஓரங்களை மடித்து விட்ட கிடைத்த தோற்றத்தில் ஓமக்குச்சி உடம்பில் ஒட்டாமல் காற்றில் ஒரு ஓரமாய் ஊதிப் போன பலூனாய் நடக்கும் போது தனியே வந்ததை பொருட்படுத்தாமல் பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லி தேங்காய் கடைக்கு அருகில் வந்த போது தான் புரிந்தது. ஆகா பெண்கள் கல்லூரிப் பெண்களும் இதில் தான் போக வேண்டுமோ?

கல்லூரி முடிந்த அக்காவின் தோழிகளும் வரும் . போகும் போதும் நம்முடைய தண்டவளாம் எல்லாம் மிக எளிதில் வண்டவாளம் ஏறிவிடுமே? நண்பர்களை பொறுத்தவரையில் எந்த பிரச்சனையும் இல்லை? சீனியர், ஜுனியர் என்ற பாகுபாடுகளும் இல்லை. எல்லா வெண்ணெய் வெட்டிகளும் ஒண்னுக்கு மண்ணா உள்ளூருக்குள் குப்பை கொட்டிக்கொண்டுருப்பதால். கல்லூரியில் எதையாவது காட்டினால் இங்கு வந்ததும் ஓட்ட நறுக்கி விட முடியும்.

பெண்களை விட, பேரூந்தை விட படியில் அந்தக்கூட்டத்தில் செருப்பு நுனியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் வர, சீவிய தலை பறட்டையாய் ஆகி தொங்குவது தான் அன்றாட முக்கிய கடமை. கத்திக்கொண்டுருக்கும் நடந்துநர் கடைசியாக சொல்வார் “அவனவன் அட்ரஸையாவது சொல்லுங்கப்பா? கருமாதி பத்திரிக்கை அடிக்க வசதியா இருக்கும் ?”.

முதல் வருடம் தொங்கி தொடங்கி பயணித்தவன் இரண்டாம் வருடத்தில் படியில் ஏறி உள்ளே நின்று பயணிக்க பக்கத்தில் வந்து நின்றாள் பானு.

கருப்பு அகத்தியராக இருந்தாள். தந்தையும் தாயும் உள்ளுருக்குள்ளே ஆசிரியர் பணி. அவளோ பெண்கள் கல்லூரிக்கு ரசாயனத்தை பாடமாக படிக்கப்போனவள் என் கெமிஸ்ட்ரியை சோதித்து சோதித்து கூட்ட நெரிசலில் சோறும் ரசமுமாய் ஆக்கிவிட்டாள்.

எனக்கு தொடக்கம் முதலே பெண்கள் என்பது புதிரானவர்களாக தெரிந்தது இல்லை. காரணம் வீட்டில், வௌியில், உறவில் உள்ள அனைத்து பெண்கள் கூட்டத்திலும் புகுந்து வௌியே வரும் போது வெடித்து சிரிக்கும் சரவெடிகளாய் அனைவரையும் சந்தோஷப்படுத்துபவனாகத் தான் உலாவி வந்துள்ளேன். எல்லோருமே ஏதோ ஒரு உறவுக்குள் வந்தவர்களாய் இருப்பார்கள்.

அக்காவிடம் பள்ளி முடித்ததும் ட்யூஷன் என்ற பெயரில் பாடம் படிக்க ஒரு பெரிய படை பட்டாளமே உள்ளே வரும். நண்டு சிண்டு முதல் சில்வண்டு கூட்டம் வரையிலும். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டுருக்கும் போது வந்தவள் தான் நாகமணி.

ஆங்கில கல்வியில் கற்றுக்கொண்டுருப்பவள் என்ற போர்வையில் ஊரில் உள்ள அனைவர் தூக்கத்தையும் அலைக்கழித்துக்கொண்டுருந்தாள். ஒன்பதாம் வகுப்பில் இருந்தவள் ஒரு காத தூரத்தை வயதுக்கு அப்பாற்பட்டு அநாயசமாக கடந்து போய் கொண்டுருந்தாள். நமக்குத் தான் அந்நிய மொழி என்பது அந்நியனுக்கு பிடிக்காத உறிட் லிஸ்ட் போல் இருந்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் அக்கா புரியவைத்த பாடத்தைக் கவர்ந்தாலோ இல்லையோ என்னை மொத்தமாக கவர்ந்து அப்போது தான் முட்டி முளைக்க முற்பட்டுக்கொண்டுக் கொண்டுருந்த மீசையின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டுருந்தாள்.

காதலா? இல்லை உறார்மோன் பிரச்சனையா? ஓரு ஈர வெங்காயமும் அன்று தெரியவில்லை. அவள் சீக்கிரமாய் வர வேண்டும். அவள் அக்காவிடம் முன்புறமாக நின்று கொண்டு மறைமுகமாக என்னைப் பார்த்துக்கொண்டு சிரிக்கும் சிரிப்பு வேண்டும். அப்போது அடித்து துடிக்கும் அந்த இதயச்சப்தம் இன்னிசையாக கேட்க வேண்டும். அதற்காவது அவள் சென்று வரும் பள்ளி பேரூந்து வாகனம் விரைவாக வந்து விட வேண்டும்.

காலை வேலையில் சோலையண்ணன் பெட்டிக்கடையில் உள்ளே நுழைந்தால் தினந்தந்தி பார்த்து விட்டு பக்கத்து பார்பர் அண்ணன் கடைக்கு உள்ளே சென்று தினமலர் படித்து விட்டு அங்குள்ள கண்ணாடி வழியே அவள் செல்லும் பேரூந்தும், எனக்காக ஓரத்து இருக்கையில் அமர்ந்து என்னை அவள் கண்கள் தூலாவும் அழகை மறைந்து இருக்க பார்க்க வேண்டும். காரணம் சமூக சிக்கல்கள் நம்மை சந்திக்கு கொண்டு வந்து அப்பாவின் பந்திக்கு முன்னால் போடப்படும் இலையாக ஆகி விட்டால்?

கசக்கி எறிய மாட்டார்? கிழித்து புதைத்து விடுவார். ?

அவள் படிப்பிலும் என்னைக் கெடுப்பதிலும் போட்டுக்கொண்டு போன வேகத்தில் என் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பல்லை இளித்தது. முதல் வரிசை மூன்று பேரில் என்னைத் தவிர அவர்கள் இருவரும் கௌரவ தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) போய் விட மறுபடியும் அடுத்து சந்தில் இருந்த பள்ளிக்கு வேறுவழியே இல்லாமல் பதினொன்று ஆரம்பம்.

அவளுக்கும் எனக்கும் பிரிவு வேறாக இருந்தாலும் மூலம் ஒன்று தான். அக்காக்கள் கொண்டு போன புலனாய்வு கட்டுரைகள் அம்மா வாசித்து முடித்ததும் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது. அவளின் அம்மா (மட்டும்) வாழ்ந்து கொண்டுருந்ததோ மாசாணி அம்மன் அருள் பெற்றுக்கொண்டு தனியாக இருந்தார். அவளின் தாத்தவும் பாட்டியும் பரிதவித்தனர் அம்மாவின் ஆர்ப்பாட்டம் பார்த்து. இரு குடும்ப பாரம்பர்யம் பகைக்குள் கொண்டு செலுத்திவிட பார்சல் செய்யப்பட்டவள் அருகே அக்கா முறை உள்ளவள் வீட்டில் அடைக்கப்பட்டாள்.

சிறை வைக்கப்பட்டது தெரியாமலே சிறகை விரித்துக்கொண்டு பறந்து திரிந்து பார்த்த போதெல்லாம் இரை கிடைக்காத பறவையாய் எனக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை.

அவளை துரத்திய அனைத்து ஊர் சில்வண்டுகள் எக்காளச் சிரிப்புடன் ஏளன வார்த்தைகள் கொண்டு நடந்து போகும் பொழுதெல்லாம் நாயன சத்தத்தை உரக்க உற்சாகமாக வாசிப்பர்.

உதைக்க முடியாது. ஏன் உரத்து பேசக்கூட முடியாது. அந்தப் பிரச்சனை அரசவைக்கு வந்து விட்டால் அப்பாவின் தண்டனைகள் மறுக்கப்பட்ட நீதிக்குள் அடங்கியதாக இருக்கும்.

எங்கே போனாள்? என்ன ஆனாள்? எதுவும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகள் முடித்து கல்லூரி பாடங்களை படிக்க ரயில் நிலைய பூங்காவில் வந்த போது அங்கு உள்ள மரம் முழுமையையும் குத்தகை எடுத்து இருவர் பெயரை ஆணி வைத்து செதுக்கும் வேலையைத்தான் கச்சிதமான ஒவியர் போல் வரைந்து கொண்டுருந்தேன்.

அன்று கலங்க அடித்துச் சென்றவள் என்னை கடந்து போனவள் அன்று ஊருக்குள் சென்ற போது என்னை கடந்து சென்றாள். என்னைப்போலவே ரெட்டையை பெற்று (என்ன ஒரு ஒற்றுமை?) ரெட்டை நாடியா முப்பரிமாண வடிவில் திரு. நாகா ஊரில் பணக்கார குடும்பத்தில் என் சீனீயர் வகுப்புத் தோழனுக்கு மனைவியாக.

(ஐயா சாமிகளா? நடையையும் உடையையும் மாற்றியாகி விட்டது. இருக்கும் கோவணத்தையும் இழுத்து விட்டுடாதீங்கோ என் ராசாக்களா?)