வாழ்க்கையில் குட்டுப்படாமலே குதுகலமாய் கழித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் அதிக குட்டுகள் விழுகின்றது.
ஆனால் வலிகளை செதுக்கும் உளியாக கருதிக்கொள்பவர்களால் தான் உத்தமமான விஷயங்களை இந்த உலகத்திற்கு தர முடிகின்றது.
அவருடைய வார்த்தைகளில் ” திரைப்பட புகழ் என்பது கொடைக்கானல் மேகம் போன்றது? எப்போது வரும்? ஏன் மறைந்தது என்று உணர்ந்து பார்ப்பதற்குள் நம்மை பரிதவிக்க விட்டு விடும்”.
” ஒரே நாளில் மொத்த புகழையும் அடைந்து விட வேண்டும் என்ற ஆவல் இல்லை. கொடிநாட்ட வேண்டும் என்று நினைக்கும் இமயமலை உச்சி கூர்மையானது கொடுமையானது. வாழ்நாள் முடிவதற்குள் எனக்கு வர வேண்டிய அத்தனையும் என்னை வந்து அடைய முயற்சிக்கும் முயற்சியில் தான் என்னுடைய இந்த சுய ஓழுக்க வாழ்க்கை”
ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்து விட்டு நமக்கு தனியாக இயக்ககூடிய அனைத்து தகுதிகளும் வந்து விட்டது என்று சொல்லிக்கொள்ளும் இந்த உலகில்
“கற்றது கையளவு. கல்லாதது உலகளவு. நான் பெற்ற 40 வருட திரைப்பட அனுபவங்களை என்னிடம் உள்ள சொற்ப வார்த்தைகள் மூலம் வௌிக்கொண்டு வரும் முயற்சி தான் இது ” என்று தொடங்குவதே வியப்பு தான்.
ஏதேனும் ஒரு துறையிலேயே சாதனை படைப்பதே அரிதாக இருக்கும் தற்காலத்தில், ஓவியத்திறமை, கலைத்திறமையுடன் எழுத்து திறமையும் உள்ள தாங்கள் உங்களுடைய பல பரிணாமங்களை இந்த நூலில் அமைதியாக அழகாக வௌிப்படுத்தியுள்ளீர்கள் ”
குழந்தைகளின் மாமா என்று பட்டம் பெற்ற தெய்வத்திரு. நேரு அவர்களின் பட்டத்தை இப்போது இவர் தான் வைத்துள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியராக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, இந்திய விஞ்ஞானத்திற்கு விடிவௌ்ளியாக அடைந்த உச்ச புகழ் மறந்து இன்று வரையிலும் இளைஞராக வாழ்க்கையை நடத்திக்கொண்டு வழி நடத்திக்கொண்டுருக்கும் இந்தியர்களின் மனசாட்சி முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்.
“நேர்மையை தனது சுவாகக் காற்றாகவும், சற்றும் பிசிறில்லாத ஒழுக்கத்தை தனது இலக்காகவும், தன் உழைப்பை மட்டுமே மூலதனமாகவும், மனித நேயத்தை மட்டுமே தன் வாழ்க்கை முறையாகவும் வாழ்ந்து காட்டிய சிவகுமார் என்ற மகா நடிகரின் வாழ்க்கையை விவரிப்பதன் மூலம், தற்கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இந்நூல் நம் தமிழ் சமுதாயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது ”
மோதிரக்கை கே. பாலசந்தர் குட்டிய பிறகு வேறு என்ன சொல்ல முடியும்?
” Perfectionist ” என்பதன் உண்மையான அர்த்தத்தை தன்னுடைய நாடக திரைப்பட உலகில் தன்னுடைய பணிகளால் செய்து காட்டி போற்றப்படுகின்ற திரு. கே. பாலச்சந்தர், அவர் வாயாலே திரு. சிவகுமாரை “Perfectionist ” என்று சொல்கிறார் என்றால் வேறு சான்றிதழ் தேவையில்லை ”
தன்னுடைய துக்ளக் பத்ரிக்கையில் குண்டக்க மண்டக்க என்று வந்தவர் போனவர் என்று அனைவரையுமே போட்டுத்தாக்கும் வார்த்தைகளையே படித்த என்னால் நம்ப முடியவில்லை. அப்பட்டமாக நினைத்ததை அப்பழுக்கு இல்லாமல் இந்த முறைதான் அப்படியே திரு. சோ அவர்கள் பட்டவர்த்தனமாக பேசியுள்ளார்.
” சிவகுமாரை எல்லோரும் நடிகருக்கான இலக்கணம்,ஓவியருக்கான இலக்கணம், ஞாபக சக்திக்கான இலக்கணம் என்று சொல்றாங்க. ஆனால் இதற்கு மேலாக அவர் ஒரு சிறந்த மனிதருக்கான இலக்கணம் “.
வேறு யாராக இருக்கமுடியும்? சேதுவுக்கும் நந்தாவுக்கும் பிதாமகனாக இருந்து இன்று நான் கடவுள் என்று காட்சியை தந்த திரு. பாலா.
” இது ராஜபாட்டை அல்ல” என்ற தலைப்பே ஓர் அற்புதமான தகவலைத் தாங்கி வருகிறது. ரொம்பப் பேர், ஊரை விட்டு நிறைய சினிமா கனவுகளை கண்களில் நெஞ்சில் அப்பிக்கொண்டு சென்னைக்கு வந்து அலைஞ்சு, எப்படியும் சினிமாவுல எளிதில் வந்திடலாம்ன்னு நெனைக்கிறாங்களோ அவர்களுக்கெல்லாம் இந்த நூல்தான் பைபிள். அவர் பெற்ற புகழுக்கு ஒரு விலை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது இதை படிக்கும் போது புரியும் “.
வயதில் மட்டும் தான் வயயோதிகம். வார்த்தைகளில் இல்லாத திரு.வாலி.
” அம்மா எலும்பும் தோலூமாக இருக்கலாம். கை கால்களில் சுருக்கம் இருக்கலாம். குளிக்காமல் வேர்வை நாற்றம் வீசலாம். எவ்வளவு இருந்தாலும் தாயின் மடியில் படுக்கிற சுகம், கருப்பைக்குள் படுக்கிற சுகம் மாதிரி தான் என்று சிவகுமார் அவர்கள் எழுதியிருக்கிறார். தாயைப் பற்றிய அந்தக்கட்டுரையைப் படித்தால் கூட இந்த நூல் எந்த அளவுக்கு நமக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் அருகாமையில் இருக்கக் கூடிய நூல் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.”
வாழ்க்கையை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாய் வாழ்ந்து கொண்டுருக்கும் வழக்கறிஞர் சுமதி.
“கலையுலகில் கறை படியாமல் ஒரு மனிதன் 40 ஆண்டுகளாக அதற்கு மேலாகவும் வாழ முடியும் என்றால் இந்த நாட்டில் தாஜ்மகாலைவிட பெரிய அதிசயம் ”
“வாழ்க்கையை ஒரு தவமாக நடத்துவதென்பது எல்லோருக்கும் எளிதல்ல. அப்படி தவமாக நடத்தக்கூடியவன் எவனாவது இருந்தால் அவனை மகாத்மா என்று அடைமொழி கொடுத்து படமாக மாட்டி விட்டு இவன் போல் நம்மால் நடக்க இயலாது என்று சொல்லிவிட்டு நாம் நம்முடைய பாதையில் நடந்து பழகிப்போன தேசமிது. சிவகுமார் வாழ்க்கை என்பது ஒரு தவம். அதுதான் சிவகுமாரிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு ”
எந்த புத்தகத்தையும் மேலோட்டமாக விரைவாக படித்து பழக்கமுள்ள எனக்கு, முந்தைய பதிவு எழுதுவற்கு முன்பு தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு சரியா? தவறா? என்று தவிப்பாய் தவித்த எனக்கு இன்று ஒவ்வொன்றாக உள்வாங்கி கொண்டுவரும் எனக்கு திரு. தமிழருவி மணியன் வார்த்தைகள் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.
“குறைந்த செல்வமுடையவனை குறைந்த செல்வம் ஆளுமை செய்யும். நிறைந்த செல்வமுடையவனை அந்த செல்வம் தான் ஆளுமை செய்யும். நிறைந்த வளம் குறைந்த மதிப்பு. குறைந்த வளம் நிறைந்த மதிப்பு. இது தான் இவர் வாழ்க்கை.”
இந்த புத்தகமே இவரால் தான் உருவாக்கமடைந்தது. எழுதக்கூடிய வாய்ப்பு திரு. சிவகுமாருக்கு அமைத்துக்கொடுத்த பத்ரிக்கையாளர், கட்டுரையாளர் திரு. சுதாங்கன்.
” நடிப்புக்கு இலக்கணமும் அகராதியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் நடிகனுக்கு இலக்கணம் திரு. சிவகுமார் என்று சொல்வதில் இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது ” என்று சொல்லி இருக்கும் இயக்குநர் இமயம் திரு. கே. பாலசந்தர் வார்த்தைகளை விட வேறு வார்த்தைகள் எங்கு தேட முடியும்?
கட்டுக்குள் அடங்காமல் திமிறிக்கொண்டுருக்கும் என்னுடைய மொத்த விமர்சனம் அடுத்த பதிவில்?