புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் பதிவு தொடர்ச்சி இரண்டு
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள் என்று நமக்கு கற்பித்த அத்தனை பாடபுத்தகங்களும் ஏன் அவர்கள் நம்மை அவர்களுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தார்கள் என்பதைப் பற்றி மறந்து கூட மூச்சு விடவில்லை. காரணம் அத்தனை அசிங்கங்களைப் பற்றி சொல்லி வளர்ந்து கொண்டுருக்கும் இளைய சமூகத்தை அவர்களின் நல்ல சிந்தனைகளில் விஷம் கலந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணமாக இருந்து இருக்கலாம்.
அத்தனையும் வௌிப்படையாக சொல்லிவிட்டால் இங்கு பலருடைய சிலைகள் பெறக்கூடிய மரியாதை கூட இன்று கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சமாகவும் இருந்து இருக்கலாம்.
ஆங்கிலேயர்கள் ஆள்வதற்காகவா உள்ளே வந்தார்கள்?
கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத இந்தியாவைப்பற்றி தவறான புரிதல்கள் இன்று வரையிலும் உண்டு. அதுவும் உள்ளே வரும் வரைக்கும் தான். உள்ளே வந்து விட்டால் தரிக்க வந்த ஆலயம் போல் நினைத்து ஆத்ம திருப்தியோடு மறுபடியும் உள்ளே வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு அரசங்கம், ஒரு அதிகார வர்க்கம் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்துமே இயல்பாகவே இந்த புனித பூமி பெற்றுள்ளது.
எத்தனையோ வேறுபாடுகள். எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள். மகிழ்ச்சியான அம்பானி ஒரு பக்கம். அன்றாடம் பானி பூரி விற்று ஜீவனம் நடத்துபவர் ஒரு பக்கம்.
கப்பல் கேப்டன் திரு. வில்லியம்ஸ் ஹாக்கின்ஸ் ( ஆகஸ்டு 24 1600) உள்ளே வந்த போது அவர் நினைத்து வந்த அத்தனை எண்ணங்களும் தவிடு பொடியானது. காய்த்து தொங்கும் லவங்கமும் ஏலமும், கூழாங்கற்கள் போல் எங்கு பார்த்தாலும் சிதறிக்கிடக்கும் வைரம், மாணிக்கம், வைடூரியமும், மாணிக்கத்தையும் பயன்படுத்த தெரியாமல் பரிதாபமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதர்கள் நிறைந்த பூமி தான் இந்தியா.
வாய்ப்பு கிடைத்தால் அள்ளிக் கொண்டு போகவும், வசதியிருந்தால் வாணிப தொடர்பும் உருவாக்கிக் கொள்ள உள்ளே வந்தவரை அடித்த வெயில் அவரது தோலை கிள்ளி கிள்ளி கிச்சு கிச்சு மூட்டியது.
அத்தனை சோகத்தையும் உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு ஆக்ரா போய்ச் சேர்ந்து ஆண்டு கொண்டுருந்த மன்னர் ஜஹாங்கீர் அரண்மனையை அடைந்த போது வாங்கி வந்த மேல் மூச்சு கீழ் மூச்சை விட்டு மூர்ச்சையாகி விழுந்து விடும் சூழ்நிலை.
காரணம் பத்து தோட்டா தரணிகள் சேர்ந்து இருபது ஷங்கர் பட செட்டிங் போல் பார்த்த ஆடம்பர மாளிகையை பார்த்து மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய அந்த அந்தப்புர பேரழகிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் மன்னர் வரவேற்று அழகியுடன் அந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தவுடன் தான் மறுநாள் சுயநினைவுக்கு வந்தார் போலும்.
தங்களுடைய கிரேட் பிரிட்டன் மாட்சிமை தாங்கிய மன்னர் செல்வத்தை விட ஜஹாங்கிரின் செல்வ வளமையும் ஆளுமையும் பார்த்த கேப்டன் தங்களுடைய நாடு கீழான பிரிட்டனாக இருந்ததை பார்த்த போது என்ன நினைத்து இருக்க முடியும். நல்ல வேளை புத்தி பேதலித்து பரலோகம் போகாமல் செய்த அந்த அந்தப்புர அழகி செய்த சமூக சேவையால் தான் அன்று அவரால் தொடங்கப்பட்ட நிகழ்வு தான் இந்திய சரித்திரத்தின் வேறு ஒரு இனிய தொடக்கம்.
ஒரு வேளை திரு. வில்லியம்ஸ் உயிர் பிழைக்காமல் போயிருந்தால், கப்பல் பயணமார்க்கமாக அத்தனை தூரம் பயணித்து வந்தததை விட, இந்தியாவிற்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று அடைய நவீன வசதிகள் இல்லாத அந்த நாட்களில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் நினைத்துருந்தாலும் அனுப்ப நினைக்கும் வேறொரு கேப்டன் வந்து சேர வேண்டிய காலத்தை நினைத்துப்பாருங்கள்
250 வருடங்களாக ஆட்சி புரிந்ததாக சொல்லப்படும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வேறு எந்த புதிய நபர்களும் உதவி செய்ய வேண்டியதாக இருக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். காரணம் நம்மவர்களின் ஓற்றுமை அந்த அளவிற்கு அவர்களுக்கு அம்சமாய் ஒத்துழைத்து அவர்களை உயர்வடைய வைத்தது.
சேரவே மாட்டோம். சேர்ந்தாலும் ஒற்றமையாய் இருக்க மாட்டோம். சமாதானமாய் இருப்பதாக நடித்தாலும் சந்தர்ப்பங்கள் வரும் போது காட்டிக்கொடுக்க தயங்க மாட்டோம். மொழி, இனம், வாழ்விடங்கள் வேறு வேறாக இருந்தாலும் ஏற்றத்திற்கான எங்கள் பங்களிப்பு இப்படித்தான் இருக்கும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன், நிலச்சுவான் என்று எச்சமும் சொச்சமும் எல்லோருமே வாழ்ந்த புண்ணிய வாழ்க்கையால் இந்திய மொத்தமும் அவர்கள் ஆளுமைக்குள் மிக எளிதாய் காலமே வழங்கி விட்டது.
இந்த இடத்தில் இன்று வரையில் முடியாமல் நீண்டு கொண்டுருக்கும் இலங்கை பிரச்சனைகள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு ஒரே நோக்கம் தான். வாணிபம். அதுவும் விறால் இறால் மீன் அல்ல. சுறா கொழுத்த திமிங்கில லாபம். அது மட்டுமே. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் “அம்பானி” லாபம்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள அடித்துக்கொள்ள பஞ்சாயத்து பன்னி பன்னி கடைசியில் பன்றிக்கூட்டத்தை மேய்க்கும் மேய்ப்பராக மாறத்தொடங்கி விட்டனர். வைத்திருந்த நவீன வசதிகள் ஒரு பக்கம் உதவியது என்றால் மறுபக்கம் அவர்கள் விரும்பி கொடுக்கும் பட்டங்களை வாங்கிக்கொண்டு தலைகுணிந்து சேவகம் செய்ய காத்துருந்தவர்களின் கூட்டம் மறுபுறம்.
வேறென்ன வேண்டும். ராஜபாட்டை தொடங்கியது. ராஜ்யங்கள் மொத்தமும் அவர்களின் ஆளுமைக்குள் வந்து விழத்தொடங்கியது