Daily Archives: ஓகஸ்ட்21, 2009

மரியாதைக்குரிய இயக்குநர் சேரன் அவர்களுக்கு

வகை தொகையில்லாமல் வலை தள பக்கங்கள் எல்லாம் வாங்கி கட்டிக்கொண்ட உங்களின் பொக்கிஷ புதையலை பார்த்தே தீர வேண்டும் என்று போன போதே, கூட்டமில்லாத திரையரங்கம் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாகயிருந்தாலும் சற்று சங்கடமாகவும் இருந்தது.

இங்கு கிழிக்கும் சீட்டுக்கும் வாங்கும் பணத்துக்கும் சம்மந்தம் இல்லாதது கூட பெரிதாய் தெரியாது. வீடு வரைக்கும் வந்து தொலைக்கும் மூட்டைப்பூச்சிகளுக்கு பயந்து தான் பரவசமான படங்களைக்கூட வீட்டுக் காட்சியாகத் தான் கண்டு தொலைக்க முடிகின்றது?

திருப்பூருக்குள் வந்து மூன்றாவதாக வீடு மாறிவந்ததை குறிப்பறிந்து சீட்டுக்கிழிப்பவரிடம் கேட்டேன்.

என்னைப்போலவே யாரோ ஒரு கந்தசாமி கலக்க வந்துள்ளதால் அமைதியயாய் ஜோதியில் ஐயக்கிமானேன்.

உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கின்றேன்?

பாரதி கண்ணம்மா தனி படக்காட்சியை கலைஞர் பார்த்து முடித்ததும் உங்களிடம் கேட்ட கேள்வி?

“உங்களின் சொந்தப்பெயரே சேரன் தானா?”

காரணம் ஆரம்ப கால கருத்துக்களை அந்த புனைப்பெயர் மூலமாகத்தான் இந்த தமிழ்கூறும் நல் உலகத்திற்கு அளித்தார்.

அன்று முதல் உங்களின் மன்னர் கீரிடத்தை இந்த தமிழ் திரைப்பட உலகம் சுமக்கத் தொடங்கியது.

வெகுளியாக வெடவெடன்னு வௌிப்படையாய் வந்து விழுந்து தொலைக்கும் வார்த்தைகள் தான் உங்களின் இரண்டாவது படத்துக்கு தரத்தயாராய் இருந்த நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெற்றுக்கொண்ட சம்பளம் வாங்கி பரவசமாய் உங்களால் பங்களிப்பு தர முடிந்தது.

ஆனால் அந்த வெகுளித்தன வார்த்தைகள் வீம்பான வார்த்தைகளாக வௌி வந்த போது அத்தனை கண்களும் வாங்கிக்கொண்டு கைகளால் தோண்டிய பள்ளங்கள் உங்கள் பாதையை மாற்றி பயத்துடன் அறைக்குள் முடக்கவும் வைத்தது.

உண்மைதான்.

மகாத்மாவையும், படேலையையும் இன்று வரையிலும் விமர்சிப்பவர்களால் தானே நாமே அவர்களை உணர்ந்து கொண்டுருக்கிறோம்.

திரை அரங்கத்திற்குள் பொறுத்துக்கொண்டு இருந்த சில நூறு பேர்களும் போக்கிடம் தெரியாமல் புழுங்கியது உங்களுக்கு தெரியுமா?

தலைப்பின் விளக்கமாக நீங்கள் கொடுத்துள்ள நீ எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் என்பதை கலைப்படம், கவிதைப்படம் மற்றும் ஆவணப்படம் என்று மாற்றி வாசித்ததை மறுப்பீர்களா?

உள்ளே இருந்த சொற்ப எண்ணிக்கை நபர்களில் யாருமே பெரிய மெத்த படித்த கணவான்கள் இல்லை. இடைவேளைக்கு வௌியே வந்தவர் புகைத்த பீடி தந்த புகையுடன் சொன்ன வார்த்தைகள் ” பொறுமையை சோதித்தாலும் பொக்கிஷம் தான் “.

இது தான் உங்களின் சமூக அக்கறை வெற்றி.

ஆனால் அரைகுறையாக அமைந்ததில் சற்று வருத்தம் தான்?

மொத்தமாக வளர்ந்த தொழில் நுட்பத்தை அத்தனை அட்டகாசமாக முடிந்தவரை பயன்படுத்தி பரவசப்படுத்திய உங்களின் பார்வையில்

ஒட்டாத ஒப்பனையுடன் வராத கடைசி கட்ட நதீரா நடிப்பை நாடகம் போல் பார்த்த உங்கள் பரிதவிப்பு புரிகின்றது. எத்தனை கிசுகிசுகள் வந்த போதிலும் உங்களின் விருப்பங்களின் ஆசைகளுக்கு உங்களின் வசன வரி தான் பதிலாக இருக்க முடியும்.

” நம்முடைய ஆசைகளுக்கும் இங்கு ஒரு அளவு இருக்கிறது “.

நடிப்பில் எல்லா ரசமும் உங்களிடம் இருப்பதால் தானே தங்கர் தங்கமாய் முன்னிறுத்தினார். ஆனால் அந்த நடிகர் சேரனை கொஞ்ச நாளைக்கு மேலூருக்கே அனுப்பி விடுங்களேன்.

நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.

இயக்குநர் சேரன் மட்டுமே பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நடிகராக இருப்பவர் தூரமாக்கி விடுவதால் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஒளி வௌ்ளத்தில் ஓய்வறியா உறக்கம் மறந்த உள்ளத்தால் உள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு.

அதுதான் அ ஆ கற்று பி. எப் என்ற எழுத்துக்கு புதிய அர்த்தம் கற்றுத் தந்த பல பரமாத்மாக்கள் நம்மிடம் உண்டு. அவர்கள் கலை சேலை மூலம் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்.

உங்களுக்கு எதுக்கு?

உங்களின் வெற்றி கொடி கட்டியதைச் சொல்லி மறக்க முடியாத கையெழுத்து புத்தகத்தை இங்கு பல பேர்கள் சிலாகித்தாலும் உங்களின் அத்தனை ஆளுமையும் ஒருங்கே வௌிவந்த காலப்பெட்டகம் தான் பாண்டவர்கள் ஆண்ட பூமி.

நகரமயமாக்கல் தத்துவத்தில் நாம் இழுந்து கொண்டுருப்பவைகள், விஞ்ஞானித்தின் வௌிச்சத்தில் விவசாயத்தின் இருட்டு பக்கங்கள், குரோத மனப்பான்மையின் கொடூர வாழ்க்கை பக்கங்கள், கூட்டுக்குடித்தன வாழ்க்கையின் மகிழ்ச்சியான தடங்கள் என்று அத்தனையையுமே இணைத்த அந்த காதல் தத்துவங்கள்.

மொத்தத்தில் எளிமையான ஏற்றமான சமூக அக்கறை.

வேறு என்ன வேண்டும்.

அதனால் தான் மாநிலம் தாண்டி அந்த காவேரிகரைக்கு கணக்குப் பார்க்க வந்த மறைந்த எழுத்தாளர் சுஜாதா உங்கள் மாண்பை, திறமையை, ஆளுமையை பறை சாற்றியதைப்போலவே படமும் பரவச வெற்றி பெற்றதில் பெரிதான ஆச்சரியம் இல்லை?

அதென்ன நகைச்சுவை என்றாலோ நடுங்கி விடுகிறீர்கள். பாரதி கண்ணம்மாவில் வேறு வழியே இல்லாமல் உங்களை நிலை நிறுத்திக்கொள்ள விட்டுக்கொடுத்தீர்கள். அதனாலயே அந்த சமூக நீதி கருத்தும் அனைவரையும் சென்று அடைந்து உங்கள் வாழ்க்கையின் வெற்றியை கொடியாக கட்டியது.

சேட்டு விரும்பியும், வட்டியை மட்டுமே நம்பி உள்ளே வந்தவரை உங்கள் பொக்கிஷம் இருட்டிய அறைக்குள் தள்ளி குழந்தை குட்டிகளுடன் திரும்பவும் ஊருக்கே போக வைத்து விட்டால் அடுத்து வரும் இளைஞர்களுக்கு அவர் எப்படி வௌிச்சத்தை காட்டுவார்?

வருபவர்கள் அனைவருமே நல்ல கருத்துக்காக ஏங்கி வருபவர்கள் என்றால் தயை கூர்ந்து மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி என்றால் சீட்டு கொடுக்கும் சந்துக்கு அருகே சீவக சிந்தாமணியும் சீறாப்புறாணமும் அதிகமாக விற்க வேண்டுமோ?

ஐயன் சொலலாத கருத்தா இனிமேல் நீங்கள் சொல்ல வேண்டும்.

ஏமாற்றத்தையும், ஏக்கத்தையுமே சுமந்த ஏழை பாமர மனங்கள் கானும் காட்சியிலாவது தன்னுடைய கனவுகளை கச்சிதமான முயற்சியில் செதுக்கி இருக்கிறார்களா என்று தான் ஏக்கத்துடன் உள்ளே வருகிறார்கள். அந்தக் கலையில் இன்று வரையிலும் வக்ரத்தை கடைச்சரக்காக தராமலிருக்கும் நீங்கள வணக்கத்துக்கு உரியவர் தான்.

வகுப்பிற்குள் 40 மாணவர்களை வைத்துக்கொண்டே படம் காட்டி பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மத்தியில் மயக்கமாய் வந்து அமருவர்கள் உடன் 400 பேர்களை மூன்று மணிநேரம் கட்டிப்போட வேண்டுமென்றால் அவர்களின் வாழ்க்கை தரத்தை நீங்கள் உணரவில்லை என்ற அர்த்தம் கொள்ள வேண்டியயிருக்கிறது.

நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் என்ற நான்கு பேருக்கு மட்டுமே ஏழு கோடி கொடுத்து தோல்வியைத் தந்த இளிச்சவாய்த்தனமெல்லாம் உங்கள் பொக்கிஷத்தில் இல்லை.

அதுவும் குத்தாட்டம் போட வைத்தவர்களை உங்கள் வார்த்தைகளில் சொல்வது என்றால் “சிலரின் திறமைகள் அத்தனை சீக்கிரம் வௌியே தெரிந்து விடுவதில்லை ” என்பதாக யுகத்தை யோசிக்க வைத்த பாரதி வரிகளைப்போல் சிறப்பாகத்தான் வந்துள்ளது.

கத்திரி வைத்திருந்தவர் கைகள் அத்தனை நறுவுசாக தொடக்கம் முதல் துண்டாக்கி தொடர வைத்தவர் மொத்த நீளத்தை மட்டும் உங்களின் அளவு கடந்த ஆசைகளின் காரணமாக கட்டிய கைகளுடன் இறுக்கமாகிவிட்டாரோ?

கிராமத்து இளைஞனை கொச்சை படுத்தியதாக அத்தனை கூட்டத்திற்கும் அன்று தலைமை தாங்கி எழுத்தாளர் பாலகுமாரனை கை கூப்ப வைத்தீர்களே?

ஆனால் இன்று உங்களை கூறு கூறாக பிரித்து மேயும் போது உங்கள் உணர்வுகள் ” பொம்பள பின்னால் வந்து அழைவதற்கு இத்தனை தூரம் வந்துருக்கவில்லை. பாடு என்றால் அர்த்தம் வேறு. அருகில் வந்து கேளுங்கள். அர்த்தம் தருகிறேன் ” என்று வியாக்ஞமாய் வெதும்பினீர்களே?

நாள்தோறும் செய்திதாள் படிக்கும் வழக்கம் உண்டு தானே?

தற்போதைய இத்தாலி பிரதமரின் தனிப்பட்ட தள்ளாட்ட ,மன்மத வாழ்க்கையைப்பற்றி அவரின் 17 வயது மகள் அம்மா அப்பா பிரிவு சோகத்தைக் கூட கணக்கில் கொள்ளாமல் ” பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக வாழ வேண்டும்

17 வயதில் இத்தனை சகிப்புத்தன்மை தந்த பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் என்று எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த ஊடக வௌிச்சத்திற்குத் தானே அத்தனை இளமையை இழந்து , வாழ்க்கையையும் இழுந்து இன்று நீங்கள் பெற்ற வசதிகள் ” சேரன் என்னையும் மீஞ்ச வேண்டும் ” என்று உங்கள் குருநாதர் வாழ்த்தும் அளவிற்கு உங்களை உயர்த்தியுள்ளது.

ஆனால் நீங்கள் உங்களிடம் சில காலமே பணிபுரிந்த உங்கள் சிஷயர் “பசங்க ” பாண்டிராஜ் வாக்கியத்தையும் உணர வேண்டும்?

” கதை சொல்லத் தொடங்கும் போதே என் (அவ) லட்சண முகத்தைப்பார்த்தே பாதிப்பேர்கள் முகத்தை திருப்பிக்கொள்வர்கள். மீறியும் பாதியில் தூங்கி விடுவார்கள் “.

இதைவிட ஒரு வலியான வேதனையான பதிவுத்தடங்கள் இந்த கோடம்பாக்க வரலாறு பதிந்து இருக்கும் என்றா நினைக்கீறீர்கள்.

பொக்கிஷம் போன்ற அசாத்தியமான உழைப்பு இல்லை. அர்பணிப்பு கூட உங்கள் அளவுக்கு இல்லை. வௌிநாடு இல்லை

வேலை வாங்கிய கலை அம்சம் இல்லை.

அத்தனையும் மீறி ஒன்றே ஒன்று “பசங்க ” படத்தில் இருந்தது. அது தான் அனைவருக்கும் பிடிக்கக்கூடிய விரும்பக்கூடிய நகைச்சுவையான உண்மைகள்.

இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்று தினந்தோறும் மரணத்தின் வாயிலை தொட்டுக்கொண்டுருக்கும் எங்களின் குருட்டுக் கண்களுக்கு அவரின் வெற்றி தான் வாழ வேண்டும் என்று வழிகாட்டிய தங்க நிறக் கண்ணாடி.

கோடம்பாக்கம் சொல்லும் அஞ்சல் பெட்டி 520 போன்ற விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

வாழ்ந்தாலும் ஏசும். வீழ்ந்தாலும் ஏதும் வையகம் இதுதானே?

எந்த ஊடக விமர்சனமும் உங்கள் இயக்குநர் தரத்தை கேலியாக்கவில்லை. அத்தனை பேர்களும் உங்களின் அளவுகடந்த ஆசையைத்தான் கேள்வியாக எழுப்பு உள்ளார்கள்.

சகிப்புத்ன்மைகளுடன் வாழ பழகிக்கொண்டுருக்கும் மக்களுடன் எந்த வகையிலாவது சச்சரவை உண்டு பண்ண வேண்டும் என்ற குள்ள நரி கூட்டத்திடம் சற்று கவனமாக இருங்கள். கதை களத்திற்கா இங்கு பஞ்சம். இரண்டாவது வெடிகுண்டு வீசப்பட்ட இயக்குநர் வீடு என்ற தலைப்புச் செய்தி உங்களுக்கு வேண்டாம் என்று ஆசைப்படுகின்றேன்.

விழுகின்ற பூக்களால் எல்லா மரங்களும் உயிர் இழந்து விடும் என்றால் அது எத்தனை பெரிய தவறான எண்ணமாக இருக்கும் என்ற உங்களின் வசன வரிகளுடன்,

எண்ணில் ஓன்பது என்பது ஆண்களின் ஆளுமையை குறிக்கக்கூடிய அசிங்கச்சொல்லாகவும் மாறி விடுகின்ற காரணத்தால் உங்களின் உண்மையான மக்கள் விரும்பி ரசிக்கும் வெற்றியை குறிக்கக்கூடிய பத்தை முத்தாக தருவீர்களின் என்று நம்பிக்கைகளுடன்

உங்களிடம் இருக்கும் வரையில் கருத்து, திரைப்படமாக மாறும் போது கூட்டு உழைப்பு, திரைக்கு வரும் போது பலரின் வாழ்க்கையின் வருமானம் சார்ந்த காரணமானவராகவும் நீங்கள் இருப்பதால்

யோசிப்பீர்கள் என்று நம்பிக்கைகளுடன்

க. கந்தசாமி

தேவியர் இல்லம். திருப்பூர்.

21.08.2009