நம்பிக்கைகளை மாற்றும் நாசகார கூட்டங்கள்……

கோவிலை விட்டு வௌியே வந்து செருப்பை தேடிக் கொண்டுருந்தேன். என்னுடையது ஒன்றும் இல்லத்தரசியின் ஒன்றும் மாறி இருந்தது. என்னை விட அவளுக்குத் தான் அதிக பதட்டம். சிரித்துக் கொண்டேன். புண்ணியத்தை தேடி வந்த இடத்தில் புதிர் போல் தேடிக்கொண்டுருந்தாள்.

அப்போது, தூரத்தில் எங்களையே கவனித்துக் கொண்டுருந்தவர் எங்கள் அருகில் வந்தார். மென்மையாக சிரித்துக்கொண்டு நான் கேட்காமலேயே தன்னை அறிமுக படுத்திக் கொண்டார்.

உஜாலா ஜிப்பா மற்றும் வேஷடி. தொங்கிக் கொண்டுருக்கும் பையிலும் கையிலும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் பிரசுரங்கள். அவர் வைத்திருந்த தாள்களை பார்த்ததும் புரிந்து கொண்டேன். சிரிக்காமல் இருந்த என்னிடம் அதை எதிர் பார்க்காமலேயே பேசத் தொடங்கினார்.

“நீங்கள் ஏன் அருகில் நடக்கும் கூட்டத்திற்கு வரக்கூடாது? ஏராளமான இன்பங்கள் அள்ளித் தர ஆண்டவன் இருக்கும் போது? “.

தொடர்ந்தார். தொடர்ந்து கொண்டே இருந்தார்.

சொர்க்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா தோற்று விடுவார். ஏற்ற இறக்கமாய், பக்குவமாய், மென்மையாய், மூளைச்சலவையாய் …..

எனக்கு அவர் பேசுவதை விட அவரிடமிருந்த அந்த தைரியம் சுவாராசியத்தையும் எரிச்சலையும் தந்த போதிலும் அமைதியாய் அவர் பேசுவதில் கவனத்தை செலுத்தாமல் வாங்கி வைத்துருந்த துண்டு பிரசுரங்களை வாசித்துக்கொண்டுருந்தேன்.

கிடைத்த சந்தோஷம் கூட இல்லாமல், இல்லாள் என்னை அவசரப்படுத்திக் கொண்டுருந்தாள். பிறகென்ன ஏழரை எதிரே நிற்கும் போது எப்படி அவளால் சந்தோஷப்பட முடியும்? அதுவே விஸ்வரூபம் எடுத்து வீடு வரைக்கும் வந்து விட்டால்?

தேவியர்களுடன் சேர்ந்து கோவிலுக்குள் வந்து விட்டால் சாமி கும்பிடுவதைத் தவிர அனைத்தும் நடக்கும். அவர்களை விரட்டிக்கொண்டே திரியவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். தேவியர்களை பள்ளியில் விட்டு விட்டு திரும்பி வரும் போது ஆசைப்பட்டு உள்ளே அழைத்தவள் அழைப்பை மறுக்க முடியாமல் உள்ளே சென்று வந்த போது தான். மனத்தின் கட்டளைகள் கிடைக்காத போது நான் கோவிலுக்குள் செல்வதே இல்லை. எனக்குத் தான் மூன்று தேவியர்கள் என்னுடனே இருக்கிறார்களே.

அவர் பேச்சைக் கேட்டு எனக்கு எந்த பதட்டமும் இல்லை. நானும் பக்குவமாய் நடந்து கொள்வதைப் பார்த்து, அந்த தைரியத்தில் அவர் தனது எல்லைகளை கடந்து போய்க் கொண்டுருந்தார். சாத்தான்களை துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு சரித்திர சொற்பொழிவாளர் போல் பேசிக்கொண்டுருந்தார்.

இடையே கடந்து போனவர்கள் அனைவரும் எங்களை வினோதமாக பார்த்தபடியே சென்று கொண்டுருந்தனர்.

அவர் மூச்சு விடட்டும் என்று காத்துருந்தேன்?

உங்கள் தாத்தாவின் உண்மையான பெயர் என்ன? நான் கேட்ட கேள்வி அவருக்கு முதலில் புரியவில்லை. மறுபடியும் கேட்டேன், ” மதம் மாறாமல் இருந்த உங்கள் தாத்தாவின் பெயர் என்ன?”

அவருக்கு புரிந்தே விட்டது. ஏழரையே போட்டு காட்டுகிறேன் வா? என்று அழைத்துச் சென்று திரும்பி வந்து கையை இழந்த “செல்” முருகன் போல் புலம்பித்தள்ளி விட்டார். புலம்பல் கடைசியில் மிரட்டலில் முடிந்தது. அருகேயிருந்தவள் சாமர்த்தியமாய் நகர்த்தி அழைத்து சென்றாள்.

வேலை அவசரத்தில் சென்று கொண்டுருக்கும் போது “டவுன் உறாலில்” இருந்து அவ்வப்போது அந்த அலறல் சத்தத்தை பலமுறை கேட்டபடியே கடந்து சென்றுயிருக்கின்றேன். பாடலாக தொடங்கும். கடைசியில் ஒப்பாரியாக முடியும். கவனத்தில் எடுத்துக்கொள்வதே இல்லை. காரணம் நான் எதையும் முழுமையாக வெறுப்பவனும் அல்ல. முழுமையாக அதையே ஏற்றுக்கொள்பவனும் அல்ல.

ஊரில் வௌ்ளிக்கிழமை அன்று வில்லுடையார் பொட்டலில் போய் சிதறு தேங்காய் உடைத்து வரச் சொல்லுவார் அம்மா. அம்மா கொடுத்தனுப்பும் அந்த சின்ன தேங்காய் அன்று எங்கள் நண்பர்கள் கூட்டத்துக்கு அல்வா விருந்து. அசுத்தப்படுத்தி விட்டு அலம்பிச்செல்லும் குளத்துக்கு அருகே இருக்கும் அந்த கருவேல மரச் சாமி வில் உடையானைச் சுற்றி ஒவ்வொரு வார வௌ்ளி அன்றும் உடைக்கப்படும் சிதறு காய்களுக்காக அங்கே ஒரு சில் வண்டு கூட்டமே காத்துக்கொண்டுருக்கும்.

தேங்காய் கைக்கு வந்ததும் மாதவனுடன் கூடி முடிவெடுத்து விடுவேன். பெரிய பகுதி எனக்கு என்று. கடைசியில் அருகில் உள்ள சந்தைக்கூடத்தில் சப்தமில்லாமல் உடைத்து தின்று முடித்துருப்போம். வாயைத் தடைத்து விட்டு சாமியிடம் போய் வேண்டிக்கொள்வோம். அடுத்த வாரமும் அம்மா தம்பியிடம் கொடுக்காமல் என்னிடமே கொடுத்தனுப்ப வேண்டுமென்று.

ஊரில் கோவிலுக்குச் செல்வதெல்லாம் ஒரு திருவிழா கணக்கு தான். செல்வதற்கு முன் வௌியே நிறுத்தி வருகை பதிவேடு முடித்து எந்த வழியாக செல்ல வேண்டும்? எப்படி திரும்பி வர வேண்டும்? யாரார் கையை எவரவர் பிடித்துக் கொள்ள வேண்டும்? என்று நேச நாட்டு முற்றுகை படை போல் அறிவுறுத்த, சொன்னதை மட்டும் செய்யும் நிலையில் இருந்த போதிலும் கோயிலுக்கு அருகே சென்றதும் அப்பாவின் அனைத்து செய்கைகளும் எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்.

அவர் வாழ்ந்த அத்தனை நாளுமே காலையில் எழுந்து கடைக்குச் செல்வதற்கு முன்னால் ஊரின் நடுவே குளக்கரை கற்பக விநாயகர் கோவிலுக்குள் நுழைந்து விட்டு தான் ஐயர் கடை காபிக்குச் செல்வார். அவருக்கு எல்லாமே கற்பக விநாயகர் தான்.

ஆனால் எத்தனை முறை போயிருந்த போதிலும் ஒவ்வொரு முறையும் தூரத்தில் கோபுரத்தை பார்த்ததுமே நடுத்தெரு என்று கூட பார்க்காமல் இரண்டு கைகளையும் மொத்தமாக தூக்கி விடுவார். அதற்கு முன்னால் துண்டு இடுப்பில் கட்டப்பட்டுருக்கும்.

இது போன்ற புகுத்தப்பட்ட கட்டளைகள் எனக்கு வேப்பங்காயாகத்தான் இருந்தது. ஆனால் அம்மா அதற்கு ஒரு படி மேல்? வௌியே அழைத்து வந்துவிட்ட சுதந்திரமே இல்லை வேறு ஏதும் வேண்டுதலோ? என்று எனக்குத் தெரியாது. கோயிலுக்குள் உள்ளே நுழைந்தது அடுத்த நொடியே அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி விட்டு உள்ளே செல்வார். உள்ளே நிற்கும் மொத்த பெண்கள் கூட்டமும் மிரண்டு வழி விட்டு பார்க்கும்.

உள்ளே சென்றதும் மொத்த கூட்டத்தையும் டபாய்த்து விட்டு சுண்டல் பொங்கல் வரிசையில் மிகுந்த கண்ணியத்துடன் வரிசையில் நிற்பேன். ஐயர் எங்கள் குடும்பத்துக்கான பிரசாத தட்டை எடுத்துக்கொண்டு வரும் போது காணாத என்னைத் தேடி மொத்த கூட்டமும் அலைபாயும்.

வகையாக மாட்டிக்கொண்டு வாங்கிய குட்டு, வாயில் அடக்கிக்கொண்டுருக்கும் அந்த சர்க்கரை பொங்கலின் சுவையை மாற்றி இருக்கும்.

தோன்றவே இல்லை. வணங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களே தவிர அவர்கள் சொல்லும் எந்தக் காரணமும் ஏற்புடையதாய் இருக்காது. ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லவும் முடியாது?

பூசி விட்ட விபூதியை அழித்து விட்டு அடுத்த தெருவுக்கு விளையாடச் சென்று விடுவதுண்டு. அன்று முதல் இன்று வரை அம்மா சொல்லும் அதே வார்த்தைகள் ” மொத்த கூட்டத்திலும் நீ குத்தமா பொறந்து தொலைஞ்சுட்ட “.

பள்ளி கல்லூரியாக மாறிய போது கூட எந்த மாறுதலும் நிகழ்ந்து விடவில்லை. உள்ளூரில் உள்ள நூலகர் இரண்டு நாட்கள் நூலகத்திற்கு செல்லாமல் இருந்து விட்டால் மறுநாள் சாலையில் சந்திக்கும் போது மறவாமல் கேட்பார். ” என்னப்பா ரெண்டு நாளா ஆளக் காணல. ஒரு பக்கம் ஒட்டடை அதிகமாயிருச்சு. சீக்கிரம் வாப்பா “. சிரிக்காமல் அன்று அவர் சொன்னது அத்தனையும் உண்மை.

தொடக்கத்தில் அம்புலிமாமா எடுத்த கைகள் தொடர்ந்து பயணித்து எங்கங்கோ போய், எதை எதையோ தேடி கடைசியில் யாருமே போகாத பகுதியாய் தூசி அடைந்து கிடக்கும் பொக்கிஷங்களில் போய் நின்றது. படித்த அத்தனையும் புரிந்ததா? புரியவில்லையா? பறிமாறிக்கொள்ள யாருமே இல்லாத போது அவைகள் எனக்களித்த வினாக்கள் ஏராளமாய் சேர்ந்து கொண்டேயிருந்தது.

எதையுமே ஏற்றுக் கொள்ள மறுப்பவனுக்குத்தான் இந்த வாழ்க்கை ஏராளமான சவால்களை வைத்துக் கொண்டு மௌனமாக இருக்கும். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு அவர்கள் ஏறும் ஏணிப்படிகள் என்றுமே எளிதாகத் தான் இருந்து இருப்பதை வாழ்க்கை முழுவதும் பார்த்து வந்துள்ளேன்.

சாக்கோட்டை என்ற ஆயிரம் வருட கோவில் திருவிழா என்றுமே என்னை பரவசப்படுத்தியே இல்லை. தீ மிதியும், அலகு குத்தலும், கடைசியாக முடியும் ஆடு கோழி வெட்டலும் இறுதியில் அச்சத்தைத்தான் தந்தது. பல நாட்கள் இரவு முழுவதும் அங்கு ஓடிய இரத்த ஆறும், துண்டித்து விழும் ஆடு கோழிகளும், உயிர் போகாத தலைகள் மட்டும் பரிதவித்து தாவித் தாவி விழுந்து அடங்கிப்போவதும் அப்போது அவற்றின் கண்களில் தெரிந்த சோகமும் அங்கு பொங்கல் வைத்துக்கொண்டுருந்த அம்மாவுக்கு புரியாது. அம்மா கேட்கும் ஒரே கேள்வி “ஒரே வெட்டுல துண்டாயிடுச்சாடா?”. இல்லாவிட்டால் சாமி குத்தமாம்.

வீட்டுக்கு வந்ததும் விருந்தாய் மாறி பறிமாறிய அனைத்தும் விளங்கிக்கொள்ள முடியா புதிராய் தெரியும்-?

நானும் மாறினேன்?

கல்லூரி இரண்டாம் ஆண்டுகளில் வந்து போன் புஷப லதா மற்றும் கன்யாகுமரி மேடங்கள் சொன்னது நடந்து போது?

” உன்னையெல்லாம் எங்கள மாதிரி ஆட்கள் திருத்த முடியாது? உன்னுடைய வாழ்க்கையே ஒரு கால கட்டத்தில் திருத்தும். அன்று தெரியும்? வாழ்க்கை கையில் வைத்துருப்பது பெல்டா இல்லை சவுக்கா?

அவர்கள் புண்ணியவதிகள். திட்டிய போதும் கூட நாகரிகமாகத் தான் வார்த்தைகளை தேர்ந்து எடுத்துருந்தார்கள். ஆனால் வாழ்க்கை எனக்கு வழங்கியதோ சிங்கப்பூர் ரோத்தாங். வீசிய வீச்சில் ரத்தம் பிய்க்கப்பட்டு, சதை கிழிந்து, விளாறிய வீச்சில் ஆறாமலிருக்கும் காயங்கள் இன்று வரைக்கும்.

திறமைக்கு, உழைப்புக்கு அப்பாற்பட்டு இங்கு ஏதோ ஒன்று இருக்கிறது? உணர்ந்த போது தொடங்கியது ” ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா? “. சந்தர்ப்பவசமாய் அதையே அன்று ஆராய்ச்சி பொருளாய் வைத்து அலைந்து கொண்டுருந்த கலந்தர் அமைந்து விட இருவரும் கூட்டணி அமைத்தோம். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து முடிந்த பிறகு முடிவுக்கு வந்தோம் ” உண்மைகளும் இருக்கிறது. அரைகுறையாய் கற்று வைத்துக்கொண்டு பெரிய பிழைப்புக்கூட்டமும் இருக்கிறது “.

இங்கு மட்டும் தான் எல்லாமே குரு சிஷயன் போர்வையில் பாதி விஷயங்கள் பார்வைக்கு வராமலே போய் விட்டது. கடைசியில் இடைச்செருகல்கள் மட்டும் மிச்சமாய் இன்று பலரையும் வாழ வைத்துக்கொண்டுருக்கிறது.

பரிகாரம் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு வாழ்ந்த குடும்பத்தை விட வீழ்ந்த குடும்பங்கள் தான் அதிகம். காரணம் அதை வைத்தே உருவான மோசடிக்கும்பல்கள் தன்னை ஆன்மிக காவலர் என்று அழைத்துக்கொண்டு வளமாக்கிக்கொண்டுருக்கிறது.

ஒருவருடைய நம்பிக்கைகள் இங்கு பலருக்கு வருமானமாக இருக்கும் போது எங்கு போய் அமைதியைத்தேடுவது? பக்தி பாசுரங்களை பரவசமாக உச்சரித்துக்கொண்டு பல மணி நேரம் வரிசையில் கால் கடுக்க காத்துக் கொண்டுருப்பவருக்கு கிட்டாத அந்த தரிசனம், விஐபி போர்வையில் வருபவர் அத்தனை எளிதாக சில நொடிகளில் எப்படி பெற்று விட முடிகின்றது?

திருப்பூருக்குள் எந்த விஷேச நாட்கள் வரும் போதும் கூட கோவிலுக்குள் தேவியர்களை அழைத்துச் செல்ல அனுமதிப்பது இல்லை. மனையாள் விருப்பத்தின் பேரில் அவ்வப்போது செல்வோம். வந்து உள்ளே நுழையும் போதே முடிவாய் சொல்ல ” போதுமடா சாமி இந்த கூட்ட நெரிசல். சாமியை பார்க்கப் போய் சட்டை கிழிந்தது தான் மிச்சம்”. என்னைப்போலவே கற்றுக்கொண்ட பின்தான் பெற்றுக்கொள்கிறாள்.

கோவிலுக்குள் நடக்கும் அத்தனையும் வித்யாசமாய் படும். வருபவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் ஏதோ கோர்ட் விவகாரம் போல் அவசரமாய் அளிக்கப்படும். முடித்து விரைந்து செல்ல வேண்டும் என்று வந்தவர்கள் அனைவரும் அங்கிருப்பவர்களை உறைய விட்டுத்தான் நகர்வார்கள். தங்களுக்கே உண்டான தரிசனம் என்ற போர்வையில் அவர்கள் தரித்திரத்தை தான் பரிசாக பெற்றுக்கொள்வதாக நினைத்துக்கொள்வேன்.

உள் உணர்தல் ஏதும் இல்லாமல், புரிதல் குறித்து அக்கறை இல்லாமல் வெற்றிக்கோட்டை தொட்டு விட்ட விளைாயாட்டு வீரன் போல் அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் பின்னால் நிற்பவர்களின் அலறலை பரிசாகப் பெற்று தீப தரிசனம் தீராத தரிசனமாய் ஆயிருக்கும்.

எங்கும் நிறைந்து இருப்பவனுக்கு அருகில் உள்ளவன் மட்டுமா கண்களுக்குத் தெரிவான்? இறையே பரம்பொருளே என்று கோவில் வாசலில் கை கூப்பிக்கொண்டுருக்கும் அந்த முடவனுக்கு கூட அவன் அருளாளன் தான். ஆனால் உள்ளே தங்களுடைய கணக்கு வழக்குகளை முன் வைத்து தெய்வத்திடம் வாதாடிக்கொண்டுருப்பவர்களுக்குத் தான் புரிந்த மாதிரியே தெரியவில்லை.

உறவினராய் உள்ளே வந்தார். அகமும் புறமும் மாசு மருவற்ற மகாலஷமியாய் குடும்பம் நடத்தினார். பெற்ற தந்தை பெரும் கொடையாளர். வந்தமைந்த கணவனோ அலுவலகமே கதியாய் கிடந்தவர். கண்டிப்பும் இல்லாத கணவனாய் போய் விட அவர்கள் இல்லற வாழ்வில் இடையில் வந்தது சூறாவளி. அமைதியை பரிசாக தந்து விட்டு அன்றாட கடமையில் கணவன். ஆனால் இவரோ தேடிய விரும்பிய அமைதி கிடைக்காமல் இருந்த போது வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தவள் அறிமுகப்படுத்தியது அந்த “சபை”.

மூன்று மாதங்கள் கழித்து எனக்கு தகவல் வந்த போது முதலில் நான் நம்பவில்லை. அவர்கள் எனக்கு உறவுக்கு அப்பாற்பட்டு உணர்வில் கலந்தவர். தாயாய், தோழியாய், குருவாய் என்னை ஆதரித்தவர். பரஸ்பரம் இருவருமே பாதிநாட்கள் நடுநிலையாளராகத்தான் மற்றவர்களால் பார்க்கப்பட்டோம்.

அவர் கூறியது அனைத்து ஆச்சரியமாய் இருந்தது. முப்பத்தி ஐந்து வருடங்கள் தேடிய அமைதி சென்ற ஒரே நாளில் அந்த மூன்று மணி நேரத்தில் கிடைத்தது என்று சொன்ன போது. தொடர்ந்து போயிருந்த நாட்களில் முழுமையாக மாறியிருந்தார். உடை, தோற்றம், பேச்சு, பழக்கம், குழந்தைகளின் பெயர் மாற்றம் என்று. கணவன் அக்கறை இல்லாதவனாக இருந்ததால் அவருக்கு எந்தப்பிரச்சனை வந்து விடவில்லை. வீட்டில் இருந்த பூஜை அறை வேண்டாத பொருள்களை போட்டு வைக்கும் அறையாக மாறிய போது அலறி விட்டோம்.

அனைத்து உறவுகளும் அவரை வெறுத்து ஒதுக்கி எந்த குடும்பச் சபையில் சேர்க்காத போதும் கூட நான் மட்டும் வெறுத்ததே இல்லை. தொடக்கத்தில் இருந்து நான் நம்பிக்கொண்டுருந்தேன். எங்கோ ஒரு இடத்தில் தப்பின் தொடக்கம் இருக்கிறது. அதை மட்டும் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஆர்வமாய் இருந்தேன்.

குடும்பச் சபையில் சேர்க்காத கோபம் அவரை இன்னும் பல சபைக்கு போக வைத்து குடும்பம் மறந்து முழு நேர உழியனாக மாற்றியிருந்தது.

சிவந்த அழகான அந்த முகம் எப்போது பூசும் மஞ்சள் துறந்து, பொட்டு இழந்து வௌ்ளுடையில் சுமங்கலி அமங்கலியாய்.

காத்து இருந்தேன். காலமும் கனிந்தது.

கூட்டமாய் கூடி இருந்த ” மண்டகப்படி” நிகழ்ச்சியில் அவரின் வித்யாசமான முகம். நெற்றில் அதே திலகம். பொலிவு இழந்த முகமாயிருந்தாலும் சபதம் உடைத்து அருகே சென்றேன்.

அவர் இயல்பிலேயே அதிக புத்தியை பெற்றவர். சென்ற இடத்தில் தௌிவாய், சென்றவர்கள் அனைவரையும் ” உண்டியலாக ” மாற்றி உலா வர விட, அமைதியைத் தேடிச் சென்றவர்கள் ஆதங்கப்பட்டவர்காக ஆக்கப்பட மீற முயற்சித்த போது மிரட்டப்பட்டுருக்கிறார்கள். முதுமையை விட இளமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட ஒவ்வொரு பிரச்சனையும் ஓராயிரம் பிரச்சனைகளை சந்திக்க வைத்தது.

அசரவில்லை. மொத்தத்தையும் ஒரு நாள் “சபை” கூட்டத்தில் அத்தனை பேர்களின் மத்தியில் ஆதங்கமாய் கொட்டி விட கிடைத்த பட்டம் தான் ” சாத்தான்”. வீடு வீடாக சென்று கொண்டுருந்தவர் இன்று வீட்டில் இருந்தபடியே தெரிந்தவர்களுக்கு விழிப்புரை ஆற்றிக்கொண்டுருக்கிறார். காலம் போய் ஞானம் பெற்றவர் தான் இழந்த சோகத்தை விட கண்களுக்குத் தெரிந்து முன்பை விட வீர்யமாய் ஆட்டம் போட்டு கொண்டுருக்கும் உண்மை சாத்தான்களைக் கண்டு கலங்கிக்கொண்டுருக்கிறார்.

இங்கு எதில் தான் குற்றம் இல்லை?

அடங்க மறுத்து அத்து மீறியவர்களெல்லாம் குரல் எழுப்பி சமூகத்தை திரும்பி பார்க்க வைத்தவர்கள், அத்து மீறி எல்லையும் உடைத்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் தன்னை நிலை நிறுத்தினார்கள். அதிகாரம் பெற்றவர்கள் அனைவரும் அன்றே மறந்து போனார்கள், நமக்குப் பின்னாலும் பல பேர்கள் அணிவகுத்து கூட்டை விட்டு வௌியேற காத்து இருப்பதை. பின் தொடர்ந்து வருபவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதை விட தன் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் காரியவாதியாக இருக்கிறார்கள்.

எத்தனையோ துறைகள். எத்தனையோ அதிகாரிகள். பார்த்தவுடனே பளிச் சென்று தெரிந்து விடும். அவர்களின் பழக்க வழக்கங்கள் நமக்கு பரிதாபத்தை உருவாக்கி விடும். மீறவும் முடியாமல் வௌியேறவும் முடியாமல் தாண்டி வந்த தடைகள் மறந்து புதிய அவதாரம் போல் பேசும் பேச்சுக்கள்.

இன்னமும் வாழ வழி இல்லாமல், ஏதோ ஒரு கிராமத்தில் மனம் இருந்தும் மதிப்பெண் இருந்தும், அதிகார வர்க்கம் அளிக்கும் வாய்ப்பு இருந்தும் பணம் இல்லாத ஒரே காரணத்தால் உயர்ந்து நிற்க வேண்டிய கால்கள் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணித்துக்கொண்டேயிருக்கிறது.

துவேஷத்தை ஒழிப்போம் என்ற அம்பேத்கார் இன்று வரையில் நினைவு நாளில் மட்டுமே நினைவில் வந்து போகின்றார். இவர்களால் தான் இந்த இழிநிலைக்கு ஆளானோம்? என்று சுருதி சுத்தமாய் சொல்லிச் சொல்லி தனது வளமையை அதிகப்படுத்தியோர் தான் இங்கு அதிகம். சொல்ல வரும் அடுத்த தலைவன் பின்னால் அணிவகுக்க அடுத்த இளைஞர் கூட்டம் தயாராய் இருக்கும் போது எந்த விடி வௌ்ளி இவர்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றப்போகிறது?

மரம் வெட்டி மகத்தான சாதனைகள் புரிந்தவர்களெல்லாம் இன்று கட்டிக்கொண்டுருக்கும் கல்லூரியின் இடங்களையும் இடத்தையும் அதிகமாக்கிக்கொள்வதில் கண்ணாயிருக்க நம்பியுள்ள கூட்டம் அனைத்தும் அப்துல் கலாமின் கனவு காண பயிற்சி வகுப்புக்கு போய்க்கொண்டுருக்கிறார்கள்.

பெற வேண்டிய அடிப்படை உரிமைகளுக்கான கல்வி அறிவு கூட தான் சார்ந்த சமூகத்திற்கு கூட அளிக்க முன்வராத இவர்கள் கையில் வளமான இந்தியா ஆளுகைக்குள் வந்தால் நிச்சயம் வளப்படுத்தி விடுவார்கள்?. அவர்கள் குடும்பத்தின் வளங்களை.

பெற வில்லையைா? புள்ளி விகிதத்தை பார்? என்றவர்களின் சொந்த குடும்ப வளர்ச்சியை பார்த்தாலே உண்மைகள் அணைத்தும் புரிந்துவிடும். நகர்மன்ற உறுப்பினர் கூட நுழைந்த நாலே நாளில் ஆடம்பரக் காரில் பவனி வருவது நம் இந்தியாவில் மட்டும் தானோ?

தனது சிந்தனையை, வாழ்க்கையை, சம்பாரித்த சொத்துக்களை பொதுவுடைமையாய் ஆக்கி விட்டுச் சென்ற தந்தை பெரியார் கூட இன்று வரையில் தனி உடைமை தான்? ஆள்பவர்களின் பின்னால் பதுங்கிக்கொள்பவர்கள் தன்னை நம்பி உள்ளவர்கள் வாழும் பதுங்குகுழிக்குள் இருந்து என்று மீட்பார்கள். அதற்கு எந்த செஞ்சிலுவை சங்கத்தை தேடுவது?

எங்களுக்குத் தேவை விடைகள். உங்கள் உசுபேத்துதல் அல்ல. ஏற்கனவே உடம்பு ரணகளமாகத்தான் இருக்கிறது. புரையோடிப்போன சட்டங்கள் அனைத்தும் உங்கள் சுபீட்சத்திறக்கேயன்றி வேறு எதற்காக?

ஓரே நாடு. ஓரே மதம். ஓரே இறைவன். ஆனாலும் அதற்குள் பிரிவுகள். பிரிந்தவர்கள் குழுக்களாய். ஆயுதம் தூக்குவது அன்றாட கடமையாய் ஆகி விட்ட நாட்டில் அதைப்பற்றி படிப்பவர்களுக்கு செய்தி. காண்பவர்களுக்கு கலவரம். ஆனால் அங்கு வாழ்பவர்களுக்கு?

அறிவு ஓளிர மூடத்தை ஒழிப்போம். சரி. பகுத்தறிவை வைத்து பகல் இரவு என்று கண்டு உணர்வோம். அதுவும் சரி. ஆனால் கூடவே பிறந்த மூர்க்கத்தை எதை வைத்து அடக்குவது? உள் உணர்தல் இல்லாமல் அறிவாலே கோட்டைக்கு வரும் அத்தனை அமெரிக்க அதிபர்களுக்கும் ஏன் இத்தனை அக்கறை பெட்ரோல் நாடுகளின் மேல். ஆயுத வியாபாரத்தை அரசியலாக்கி அகிலத்தையும் அவல நிலையில் வைத்துருக்கும் அவர்கள் அனைவரும் காமராஜரின் பள்ளித்தோழர்களா?

எந்த மதத்தில் மற்றவர்களின் நம்பிக்கையை சாத்தான் என்று வர்ணிக்கச் சொன்னது? எந்த மதத்தில் துப்பாக்கி தூக்கி மனித வெடிகுண்டால் எனக்கு மாலையிடு என்றது?

புத்தரை கடவுளாகக் கொண்டவர்கள் இன்று ஒரு இனத்தையே புல் பூண்டாகி விட்டார்கள். கொண்டாடிய அரசாங்க விடுமுறையில் மருத்துவனையில் சேர்ந்து விட்டார் அந்த புத்தர்.

எல்லாவற்றின் மூலம் என்பதே இங்கு திரிக்கப்பட்டு திரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. வௌ்ளமாக, கடலாக உள்ளே வந்து கொண்டுருக்கும் வௌிநாட்டு பணத்தையெல்லாம் தின்று செரித்த நாய் பேய் நயவஞ்சக நரிக்கூட்டமெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டுக்கொண்டு அடுத்தவர் பாவங்களை துடைக்கின்றேன் என்று வாழ்க்கை முழுமைக்கும் துடைக்கவே முடியாத சமூகப்பிழை உருவாக்கி தங்களை மட்டுமே தொடர வைத்துக்கொண்டுருப்பதை எந்தக் கடவுள் எந்த அவதாரம் எடுத்து வந்து காப்பாற்றப் போகிறார்?

ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட பணம் சார்ந்த அனைத்து முடிவுகளும் காடு மலை ஆறு கடல் தாண்டி வந்து கணக்கற்ற பேரழிவைத் தந்து கொண்டுருக்கிறது. தந்து கொண்டே இருக்கும். கணக்கு போட்டவர்களின் பொருளாதார கணக்கு புரியாமலே பாமரன் பரம ஏழையாகி, படித்தவர்களை பரதேசியா(க்)கி பரிதவிக்க விட்டு வெற்றி விழா கொண்டாடி விட்டு விமான நிலையத்தில் காத்து கொண்டுருக்கிறார்கள்.? அவர்களின் குழந்தைகளை படித்து வர அனுப்புவதற்கு.

பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து விடாதீர்கள். கடவுச்சீட்டில் கவனம் தேவை.

19 responses to “நம்பிக்கைகளை மாற்றும் நாசகார கூட்டங்கள்……

  1. Meaningful entry. I have similar search and similar notion about nationalism.
    Keep up the good work.

  2. anbu jothiji unkalin pathivu unkal vazhkayil mattumalla nam ellorudaya vazhvilum nadanthathe.

    thanks

    by t.s.muthu

  3. நல்ல பதிவு ஜோதி சார் , நடை எல்லோரும் சொல்வது போல்தான்

  4. நன்றி எழுத்தாளர் திரு. மாலன்.

    அன்புள்ள ஜோதி,

    உங்கள் கடிதத்திற்கு நன்றி. முன்னர் நீங்கள் வலைப்பூவிற்கு பின்னூட்ட்மாக அனுப்பிய கடிதமும் கிடைத்தது. அதில் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் பதில் அனுப்ப இயலவில்லை.

    படைப்புப் படித்தேன். உங்கள் வலைப்பூவும் படித்தேன். சிந்தனை அடுக்குகளாக அவை அமைந்திருக்கின்றன. மொழி இன்னும் எளிமைப் பட வேண்டும். மொழியின் முதல் நோக்கம் தொடர்புபடுத்தல்.

    நிறைய இடங்களில் கசப்பு கசிகிறது. இங்கு வெற்றிகள் எல்லாம் தந்திரத்தால் ஈட்டப்படுகின்றன என்பதைப் போல ஒரு தொனி.

    நான் ஆக்கபூர்வமான சிந்தனைகளில் நம்பிக்கை உள்ளவன். இவ்வுலக்ம் இனிது, இவ் மனிதர் இனிய்வர் என்ற மகாகவியின் வாக்கினை ஏற்றுக் கொள்பவன். வாழ்வின் மீதும், மனிதர் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும் எந்தப் படைப்பையும் நான் அங்கீகரிக்க மாட்டேன்.

    நான் திட்டமிட்டுக் கொண்டிருப்பது இளைஞர்களின் திறனுக்கான ஓரு களம்.. 1981ல் வெளிவந்த திசைகள் பற்றி அறிந்திருக்கலாம். இது இன்றையத் தலைமுறைக்கான அது போன்ற முயற்சி.

    இலக்கியப் பத்திரிகை செய்வதற்கான முனைப்பு அல்ல.

    அன்புடன்
    மாலன்

  5. சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பதிவுக்கு உண்டான விஷயத்தை மிக சாதாரணமாக உங்கள் கேள்வி மூலம் கேட்டதற்கு?

    நான் மற்றும் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை, வாழ்ந்து வந்த வாழ்க்கை, திருப்பூர் உள்ளே உள்ள உண்மையான அதன் முகம், முடிந்தவரையில் நகைச்சுவை சுவராஸ்யங்கள் இந்த பஞ்ச பாண்டவர்கள் தான் என்னுடைய பதிவுகள்.

    படித்தவர்கள் என்று பொது இட ஓதுக்கீட்டில் அனைவரையும் ஒரே வட்டத்திற்குள் கொண்டு வராதீர்கள். காரணம் எம்.பி.ஏ முடித்து விட்டு இங்கு வேறு வழியே இல்லாமல் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் உள்ளே வருவார்கள். அவர்கள் சூழ்நிலை மற்றும் கல்வித்தகுதி பார்த்து அவரை ஓ.கே. செய்து அதிகமாக டார்ச்சர் செய்யாமல் நிறுவனர் அறை வரைக்கும் கொண்டு போய் விட்டு விடுவதுண்டு.

    அவருடைய “திறமை” வௌியே வந்த காரணத்தால் தொடக்கத்தில் இரண்டு ஆயிரம் வாங்கிக்கொள். மூன்று மாதங்கள் கழித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னதாக பல் இளித்துக்கொண்டு என் முன்னால் வந்து நிற்பவர்களை எந்த வரிசையில் கொண்டு வருவீர்கள். எவ்வாறு அவர்களின் மற்ற சமூக அறிவை மதிப்பீடு செய்வீர்கள்.

    எதையும் மாற்ற வேண்டும் எவரையும் பின் தொடரச்செய்ய வேண்டும் என்ற பேராசை என்பதெல்லாம் இல்லை. அதற்கான தகுதிக்கு நான் எனக்கே நான் அளிக்கும் மதிப்பெண் பெயிலுக்கு கீழே. என்னைப்பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும் என்பதால்.

    ஆதங்கங்களை வேறு யாரிடம் போய் சொல்ல முடியும்.? மறுப்பு இல்லாமல் எவர் நம்மை தொடர்பில் வைத்துருப்பர்? பாருங்கள் என்னுடைய அனுபவம் உங்களுக்குள் ம் இருந்ததால் தானே இந்த முறை “அருமை” என்று சொல்லி இருக்கிறீர்கள்?

    இதை பாராட்டு என்று எடுத்துக்கொள்வதை விட இருவரின் ஒரே புரிதல் தான் வௌிப்படுகின்றதாக எடுத்துக்கொள்கிறேன். நன்றி.

    மற்றபடி உங்கள் கேள்விக்குறி என்னையும் யோசிக்க வைத்தது?

    https://texlords.wordpress.com

  6. எல்லோருக்கும் ஏதாவது ஒரு ரயில் பயணங்களிலோ அல்லது பேருந்து பயணங்களிலோ ஏற்பட்டிருக்கும் நீங்கள் முதலில் சொன்ன அனுபவம். உங்களுக்கு ஏற்பட்டது குழப்பமா என்று தெரியவில்லை ஆனால் சிறு வயதில் இருந்ததை விட இப்பொழுது வேறுபட தோன்றுகிறது. கடவுளை நினைக்கும்போது மட்டும். ஏன் அது அதிகம் படிப்பவர்களிடம் மட்டும் உள்ளது என்பது ஒரு ?.
    —————————————

    என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நீங்கள் பார்த்தவற்றை/அனுபவித்தவற்றை இம்மி பிசகாமல் மாற்ற விழைகிறீர்களா என்பதுதான்?
    ———————————
    நீங்கள் சொல்லிய கருத்துகள் மிக அருமை….

  7. நன்றி நாகா…..

    ஒத்துப்போனதற்கும் ஒதுங்கிப் போனவனை அழைத்து வந்தமைக்கும்.

    இப்போது புரிந்து இருக்கும் உங்களுக்கு? ஏன் இடுகை தொடங்குவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன் என்று. காரணம் நம்முடை பலம் மற்றும் தரம் என்பது பலருடைய குட்டலுக்கு பிறகு தான் நமக்கேத் தெரியும். வாழ்க்கை கற்று தந்ததால் வந்த வசதிகளைப்போல் நீங்கள், சுந்தர் கற்றுத்தருவதால் உருவாக்கப்போகும் இடுகையும் சிறப்படையும் என்ற நம்பிக்கையுண்டு.

    தேவியர்கள் இன்று கேட்ட கேள்வி?

    ” ஞாயிறுக் கிழமை மட்டும் காலை முதல் மாலை வரை எந்த தொந்தரவும் இல்லாமல், படிப்பு இல்லாமல் முழுமையாக தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் விளையாடலாம், பார்க்கலாம் என்று சொல்லி விட்டு இன்று நீங்கள் ஏன் செய்திகள் மட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று எங்களை தொந்தரவு செய்கிறீர்கள்? ”

    நட்புடன் ஜோதிஜி.

  8. சகிப்புத்தன்மை மற்றும் புரிதல் பற்றி முழுமையான அக்கறை இல்லாமல் அழுந்தப்பட்டு வௌியே வந்துருப்பதால் தான் என்னவோ உங்களுடைய முடிவு வாக்கியம் என்னை உணர வைக்கின்றது. உண்டு மறுப்பதற்கு இல்லை. உண்மைத் தமிழன் இடுகையை அறிமுகப்படுத்திற்கும் யாருடைய நடை போல் அமையாமல் இருப்பதை அறிவுறுத்தியதை குறித்து சந்தோஷ நன்றி. ஆனால் என்னுடைய சுவை குறித்து உங்களுடைய பார்வைக்கு இந்த இடுகையை அளித்துள்ளேன். உங்களால் முடிந்தால் இவரை தொடர முடியுமா என்று பாருங்கள். http://tamilsasi.com/content/view/60/9/ (Sasi”s Blog) . எந்த பதிவுகளை விரும்பி படித்துக்கொண்டுருப்பவன் என்பதற்காக. இந்த சுவையில் இருப்பவன் எந்த வாழ்க்கை (சொந்த,தொழில் மற்றும் பதிய நினைக்கும் பதிவு வாழ்க்கை) வாழ்ந்து கொண்டுருப்பான்? என்று புரிந்து கொள்வீர்கள்.>?

    இதில் உள்ள விஷயத்திறக்காக அல்ல. பதிவில் உள்ள (Quality Content ) நன்றி / நாகா வார்த்தைக்கு. கவரப்பட்டதால் தொடர்கின்றேன். இதைப்போலவே தேடிக்கொண்டு தொடர்ந்து கொண்டுருக்கிறேன். வண்ணத்திரை போன்று படிப்பதற்கு தான் வீட்டில் பேப்பர் போடுபவர் எல்லாவற்றுக்கும் சேர்த்து மாதம் 1000 ரூபாய் வாங்கிக்கொண்டுருக்கிறாரே?

    நட்புடன் ஜோதிஜி,

  9. உங்கள் இடுகையின் கருத்துக்களோடு நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். ஆனால் வெகுஜன வாசகர்களை உங்கள் எழுத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் (விரும்பினால் மட்டுமே) உங்கள் எழுத்து நடையில் மாற்றமும் சற்றே நீளத்தைக் குறைப்பதும் அவசியமாகிறது. தொழில்நுட்ப உதவிகள் தேவை எனில், என்னல் இயன்றவரை உங்களுக்கு உதவுகிறேன். திருப்பூரில் பரிசல், வெயிலான் போன்றோரின் ஆலோசனைகளையும் பெறவும். கணினியில் நீண்ட நேரம் எந்த இடுகைகளையும் தொடர்ந்து வாசிக்க இயலாது, அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பினும். உங்கள் அன்பிற்கு நன்றி. தேவியருக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்..

    -என்றும் அன்புடன்,
    நாகா

  10. மறுபடியும் நான் – முந்திய பின்னோட்டத்தில் ” அப்படின்னு கேட்டாள் என் மகள் ” ன்னு வாசிக்கவும்.

    நீங்கள் ரொம்ப கேட்பதால் சொல்கிறேன், எனக்கு விமரிசனம் அவ்வளவாக தெரியாது, …. நான் படித்த வரை, பினாத்தல், லக்கி, பரிசல், ரத்த்நீஷ், ( முயல்)… தான் சொல்ல வருவதை ரத்தின சுருக்கமாக சொல்வார்கள், பினாத்தல் , மற்றும் டுபுக்கு எழதியது நிறைய சுஜாதாவை ஞாபக படுத்தும் ( இது நிறை, குறை அல்ல அதை முதலில் உணர வேண்டும் ) … நீள் பதிவு என்பது, உண்மை தமிழன் மட்டுமே எழுதலாம், மற்றவர்கள் எழுதினால் …வேறு ஓன்று மில்லை, படிக்க மாட்டார்கள். ஒருவர் மாதிரி ஒருவர் எழுத வேண்டாம், ஆனால், படிக்க தூண்டும் படி எழுத முயற்சிப்பதில் தவறு ஏதும் இல்லை… கோபத்தை . காட்டாமல் இருப்பதும் நல்ல குணம்.

  11. நன்றி. வாசிப்பின் போது வாழ்ந்தவனின் வாழ்க்கை மற்றும் அவரின் எண்ணங்கள் வாசித்து இருப்பவர் வாழ்ந்து எண்ணி இருந்தால் அங்கே நடை தடையாய் இருக்காது என்பது எனக்கு வரும் கடிதங்கள் மூலம் உணர்ந்தது. நீங்கள் குறிப்பிட்டதைப்போலவே வாழ்க்கை முழுவதும் இது தான் என்னுடைய இடம், இங்கு தான் நம்முடைய வாழ்க்கை என்று உணராமலே அதன் போக்கிலேயே இழுத்து சென்றவனால் எந்த இடத்தை அறுதியிட்டு காட்ட முடியும்?

    எத்தனையோ பேர்கள் பாரதி ராஜாவின் படங்களை பார்த்து காதல், காட்சி அமைப்பு, வசனம் இன்னும் பிறவற்றை ரசித்து மகிழ்வது போல் எனக்கு அவர் படத்தில் வரும் காந்திமதி மற்றும் வடிவுக்கரசி கதாபாத்திரங்கள் தான் கவர்வதாய் இருக்கும்.

    காரணம் அவர்கள் அனைவரும் உருவ ஒற்றுமை தவிர அனைத்துமே கண் எதிரே நான் பார்த்து பழகியவர்கள். துளி கூட சந்தேகம் இல்லை.

    நல்ல விமர்சனத்திற்கு நன்றி. இரண்டு நாட்கள் எழுதி ஓட்டி வெட்டி திருத்திய பிறகும் போட்ட சட்டை அளவு சரியில்லை என்றால் சிவந்தி ஐயா சொன்னது சரியாகத் தான் இருக்கும்.

    நீங்கள் விரும்பும் மாற்றம் எனக்குண்டான முன்னேறத்தின் முதல் படி. உணர்கிறேன். உள்வாங்கியதை முயற்சிக்கின்றேன்.

    நட்புடன்

    ஜோதிஜி

  12. மன்னிக்கனும் Jothig அவர்களே ,

    படிக்கவே முடியவில்லை. ஏனோ எல்லா வரிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு கன்னியாகுமாரியில் தொடங்கி திருப்பதி போய் மௌண்ட் ரோட்டில் நிற்கிறது.

    வரிகளை நேராக எழுதினால் சுவாரசியம் குறையாது என்றே நினைக்கிறேன். திரு. சவந்தி ஆதித்தனார் சொன்னாதாக நினைவு ‘ஒரு வரியை பாதியில் படித்தாலும் பொருள் மாறக்கூடாது’.

    உங்கள் அனுபவங்களைப் படிக்கத் தான் ஆசை , ஆனால் நடை தடை விதிக்கிறது !

  13. ஒவ்வொரு முறையும் உங்களிடம் இருந்து ஏமாற்றம் தான் எனக்கு பரிசாகக் கிடைக்கின்றது. நீங்கள் என்னைச் சொல்வது போல் உங்களை வாசிப்பர் என்ற நிலை தாண்டி விமர்சிப்பவர் என்று கோட்டுக்குள் இழுக்க இழுக்க நீங்கள் தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு அழும் குழந்தை போல். நம்பிக்கை சிறிது வந்துள்ளது. நம்மாலும் எழுத முடியும் மற்றவர்கள் வாசிக்கக்கூடிய அளவிற்கு என்று. ஆனாலும் பலர் சொல்லும் அந்த எளிமை இல்லலாததால் சேர வேண்டிய நபர்களுக்கு இன்னும் சேராமல் இருக்கிறதோ? என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஆனால் விதி செய்த மாயம் என்னுடைய எழுத்துக்களில் நீங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையும் (இதே போல் பலரும்) இருந்து விடுவதால் உங்கள் வாசிப்பு விமர்சனத்திற்கு போகாமல் ரசிப்பில் போய் முடிந்து விடுகின்றது? நன்றி சுந்தர்.

    நட்புடன்

    ஜோதிஜி

  14. வணக்கம் நண்பரே, முடிந்தால் சிரியானா என்ற ஆங்கில படத்தை பாருங்கள், வீடியோ கடைல கிடைக்கனும். கோவில், கூட்டம், கோபுர கும்புடு …. என்னென்னோவோ , வழக்கம் போல சுவாரசியமாக சொன்னீர்கள்.

    இதை நான் தனி பதிவா எழுதனும், இருந்தாலும் உங்ககிட்ட சொல்றேன், இரண்டு வருடம் முன்பு, நான் , என் மகள் ( அப்போது ஐந்து வயது ), என் மூத்த அண்ணனின் மகன், …அவன் இப்போது இருப்பது நீங்கள்/ நான் இருந்த தளம் , அதாவது தேடலில் உள்ளான். என் மீது அதீத ப்ரியம் ( நீங்கள் உங்கள் சித்தப்பாவிடம் காண்பித்தது போல் ) ..ஆகவே , நாங்கள் சபரி மலை போகலாம் என்று முடிவு எடுத்த பொழுது , மிகுந்த சிரமத்தில், எங்களுடன் சேர்ந்து கொண்டான்…

    நாங்கள் ஒரு நல்ல நாளில் , திருவனந்தபுரத்தில் இருந்து இருமுடி கட்டி, மூவரும் போனம், கூட ஐயப்பன் என்ற பெயர் உடைய நண்பனும் … போகும் வழியில் ஒரு இடத்தில நாங்கள் நால்வரும் நன்றாக டிபன் சாபிட்டோம், குழந்தை வண்டியில் தூக்கம். …காலை ஒரு இரண்டு மணி இருக்கும், பம்பையில் குளித்து, கணபதிக்கு, செதர் தேங்காய் உடைத்து, படி ஏற தொடங்கினோம், வேகமாக போனோம், நாங்கள் போனது, ஏழாம் தேதி டிசம்பர், ஆறாம் தேதி கெடிபிடி ரொம்ப நிறைய இருந்ததால், அந்த ஆறாம் தேதி கூட்டமும் நிற்கிறது வரிசையில் .. கொஞ்ச தூரம் போனவுடன், வரிசை அவ்வளவு தான், நின்று விட்டது, ..ஒரு இருபதுக்கு ஐந்து அடி உள்ள இடத்தில, குறைந்தது இருநூறு ஆட்கள், ஐந்து மணி நேரமாக ஒரே இடத்தில தான் நிற்கிறோம், …

    எனக்கோ வரிசையில் நின்று தான் தரிசிக்க வேண்டும் என எண்ணம், என் அண்ணா பையனோ, என் மனதில் என்ன ஓடுகிறது, நாம் திரும்பி போகலாமா என சொல்வதற்கு பயம் / தயக்கம், இறுக்கமான சூழ்நிலை என்றால் என்ன என்று அன்று நிஜமாகவே உணர்ந்தேன் நிறைய பேர் திரும்பி போய் கொண்டிருக்கிறார்கள் .. எங்கு நிற்கிறோம், இன்னும் எவ்வளவு தூரம் உண்டு, எதுவுமே தெரியாது. எங்கள் கூட ஐந்தே வயது ஆன என் மகள், நடந்து வந்த அலுப்பு , கையில் தண்ணி , பிஸ்குத் எதுவும் இல்லை… பக்தி இருந்த இடத்தில் இப்போது எரிச்சல், சுவாமி , சரணம் என விளி, இட்டவர்கள் கூட , கவலை மட்டுமே காட்டும் முகம்…

    வாழ்கையிலேயே எப்போதாவது எடுத்த ஒரு நல்ல முடிவை போல், அன்று 7 மணி நேரத்திற்கு பிறகு, வெயிட் செய்தது போதும் முதலில் இந்த வரிசையை விட்டு வெளியில் வருவோம் என முடிவெடுத்தோம், அந்த ஐயப்பன் ( நண்பன் ) ..மிகவும் பசை உள்ள ஆள், அதாவது, அவருக்கு அங்கு உள்ள எல்லாரையும் தெரியும், நேராக கெஸ்ட் ஹவுஸ் போனோம், … அரை மணி நேரத்தில் ஒரு ஆள் எங்களை கொண்டு போய், பதினெட்டாம் படியில் விட்டார், நல்ல தரிசனம், மேல் சாந்தி, மற்றும் சில பெரியவர்களை பார்த்தோம், ஒரு காபி கூட கிடைத்தது.

    நிற்க, திருவனந்தபுரத்தில் , வீட்டுக்கு அருகில் ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது, சிறிய கோவில், ஆனால் சுத்தமாக, நிறைய விளக்கு ஏற்றி பூஜை எல்லாம் நடக்கும், அந்த கோவிலில் உள்ள ஐயப்பனின் விக்ரஹம், சபரி மலையில் உள்ளது மாதிரியே இருக்கும் , நாம ஏன் ஐயப்பனை பார்க்க சபரி மலை போகணும், இங்கேயே பார்க்கலாமே….. அப்படின்னு கேட்டா

    நீங்கள் சொன்னது போல் துபாய் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கேன்

sundar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி